நீளும் போர் : குறையும் ஆதரவு

 

-சண் தவராஜா-

உக்ரைன் மீதான படையெடுப்பு ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கிரிமியப் பாலம் மீதான உக்ரைனின் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யா ஆரம்பித்த நீண்ட தூர எறிகணைத் தாக்குதல்களால் உக்ரைனின் மின்சார சேவை முற்று முழுதாகச் செயலிழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.

பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மின் விநியோகம், எரிவாயு விநியோகம் என்பவை தடைப்பட்டுள்ள சூழலில் பொது மக்கள் பெருந் துயரத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

ஆகப் பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, உக்ரைனின் சக்தித் துறையில் 40 விழுக்காடு வரை ரஸ்யப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதேவேளை, இத்தகைய தாக்குதல்களை மேலும் தொடரும் உத்தேசத்துடனேயே ரஸ்யப் படைத் துறை உள்ளதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் மேலும் பல இலட்சக் கணக்கான உக்ரைன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை தோன்றியுள்ளது. ஐரோப்பாவைப் பெறுத்தவரை பனிக் காலத்தைக் கழிப்பதற்கு இல்லங்களில் சூடேற்றிகள் இருப்பது அவசியமானது.

இல்லாவிடில், நோய் வாய்ப்படாமலேயே மனிதன் குளிரில் விறைத்து மரணத்தைத் தழுவும் நிலை உருவாகும். எனவே, உக்ரைன் மக்கள் – ஆகக் குறைந்தது பனிக் காலம் முடியும் வரையிலாவது – நாட்டைவிட்டு வெளியேறி தமது உயிர்களைக் காத்துக் கொள்வது தவிர்க்க முடியாதது.

போரின் ஆரம்ப நாட்களில் தான் கைப்பற்றிய கார்சான் நகரை விட்டு ரஸ்யப் படைகள் வெளியேறி உள்ள நிலையில் அந்த நகர் மீண்டும் உக்ரைன் வசமானாலும் கூட போர்முனை மிகவும் மந்தமாக இருப்பதாகவே தெரிகிறது.

படை நகர்வுகளை விடவும், நீண்ட தூர எறிகணை, விமானத் தாக்குதல், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் என்பவற்றையே இரு நாட்டுப் படையினரும் பெரிதும் நம்பிச் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

பனிக் காலத்தில் படை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமானது. குளிரான காலநிலையில் இராணுவத்தினர் முன்னேறிச் செல்வதில் உள்ள சிரமத்துக்கும் அப்பால், பனிப் பொழிவுகளின் போது முன்னேறும் படையினருக்குத் தேவையான விமானப் படை உதவிகளையோ, எறிகணை உதவிகளையோ துல்லியமாக வழங்க முடியாது.

தவிர, கனரக வாகனங்களுக்கான எரிபொருள்கள் உறைந்து போகும் அபாயமும் உள்ளது. ஆனால், இத்தகைய சூழலிலும் வெற்றிகரமாகப் போரிடும் ஆற்றலையும், அனுபவத்தையும் இரண்டு நாடுகளினதும் படையினர் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, ரஸ்யப் படைகள் இத்தகைய போரில் அதிக அனுபவத்தைக் கொண்டுள்ளனர் என்பது இரகசியமான செய்தி அல்ல.

எனவே, அடுத்து வரும் மாதங்கள் தற்போது உள்ளதைப் போலவே மந்தமான போர் முனைகளைக் கொண்டதாக விளங்குமா, அல்லது மேற்குலகு உட்பட இராணுவ வல்லுனர்கள் எதிர்பார்க்கும் வகையில் ரஸ்யா புதிய உத்தியுடன் உக்கிரமான படை நடவடிக்கைகளை மேற்கோள்ளுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மறுபுறம், உக்ரைனில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படும் அகதிகளை வரவேற்க(?) ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன. ஐ.நா. சபையின் தகவல்களின் பிரகாரம் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வரையான உக்ரேனியர்கள் அடுத்துவரும் நாட்களில் நாட்டைவிட்டு வெளியேறலாம் எனத் தெரிகின்றது.

ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் அகதிகளாக உள்ள நிலையில் மேலும் இரு மடங்கு எண்ணிக்கையானோரின் வெளியேற்றம் என்பது அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள நாடுகளுக்குப் பெரும் சுமையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

உக்ரைன் அகதிகளைப் பராமரிப்பதில் உள்ள பொருளாதாரச் சுமை என்பதற்கும் அப்பால், போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட உணவு மற்றும் பாவனைப் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போருக்கான தமது ஆதரவை மீள் பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

பல மாதங்களையும் கடந்து நீடிக்கும் போர்இ போர் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் உண்மைக்கு மாறான செய்திகள், உக்ரைன் தரப்பில் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் என்பவை ஐரோப்பிய மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.

அனைத்துக்கும் அப்பால், வேறு செய்தி மூலங்களில் இருந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் மக்கள் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதுடன், ரஸ்யா தெரிவிப்பதைப் போன்று நேட்டோ இராணுவக் கூட்டணியின் திட்டமிட்ட, தொடர்ச்சியான ஆத்திரமூட்டலே ரஸ்யப் படையெடுப்புக்குக் காரணம் என நம்பவும் தலைப்பட்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, அண்மையில் யேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றை ஆதாரமாகக் கொள்ளலாம். அக்டோபர் மாதத்தில் நாடு தழுவிய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்களில் 40 வீதமானோர் நேட்டோவின் ஆத்திரமூட்டல் காரணமாகவே ரஸ்யப் படையெடுப்பு நடந்ததாக நம்புகின்றனர்.

சோசலிச நாடாக முன்னர் விளங்கிய கிழக்கு யேர்மனிப் பகுதியில் இவ்வாறு கருதுவோரின் எண்ணிக்கை 59 விழுக்காடாக உள்ளது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் மூன்றிலொரு விழுக்காடு மக்கள், வரலாற்றுக் காலம் முதலே ரஸ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்து வந்துள்ளது எனக் கருதுவதுடன் உக்ரைன் மண்ணில் அமெரிக்கா அபாயகரமான உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆய்வு கூடங்களையும் கொண்டிருந்தது என்பதையும் நம்புகின்றனர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இதே நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தியதை விடவும் அதிக எண்ணிக்கையானோர் ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தமை நோக்கத்தக்கது.

கிட்டத்தட்ட இதே போன்ற மனோநிலையே ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் உருவாகி வருகின்றது.

குறிப்பாக, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் விடயத்தில் மக்களின் ஆதரவு குறைந்து வருகின்றது. இந்த ஆதரவு இத்தாலியில் 41 விழுக்காடாகவும், யேர்மனியில் 57 விழுக்காடாகவும், பிரான்சில் 62 விழுக்காடாகவும் உள்ளது.

மறுபுறம், அதிகரித்துவரும் விலைவாசிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் பேரணிகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அக்டோபர் 29 இல் செக் குடியரசின் தலைநகர் பராக்கில் இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இத்தனைக்கும் செக் குடியரசு, உக்ரைன் போரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றமை நோக்கத்தக்கது.

நவம்பர் 5 இல் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொண்ட மக்கள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரியதுடன், உக்ரைனுக்கான ஆயுத வழங்கலை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரினர்.

இதுபோன்ற பேரணிகள் யேர்மனியின் பல நகரங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு போராக உக்ரைன் போரைப் புறமொதுக்கிவிட முடியாது. ஏனெனில், உலகின் அனைத்து நாடுகளையும் ஏதோவொரு விதத்தில் சிறிதளவேனும் பாதிக்கும் ஒரு போராகவே இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அமைதியை, சமாதானத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் பெருவிருப்பு. ஆனால், சாதாரண மக்களின் இந்த விருப்பை வல்லரசு நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை.

அவை இன்னமும் தங்களின் வல்லாதிக்கக் கனவுகளிலேயே பயணம் செய்ய விரும்புகின்றன. இத்தகைய கனவுகளால் வீணாவது பொது மக்களின் வரிப் பணம் மாத்திரமல்ல, வெகுமக்களின் சமாதான விருப்பும்தான்.