ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியாக கடமையிலிருந்து தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஜூன் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள் இன்று புதன்கிழமை பிரியந்த லியனகே, விராஜ் விரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது, பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்குகளுக்குத் தேவையான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, வழக்குகளை ஜூன் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.