நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20-20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் சிறந்த வாய்ப்பை இலங்கை அணி துரதிஷ்டவசமாக இழந்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததன் காரணமாக இவ்வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.
தென்னாப்பிரிக்காவின் பார்ல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடு;பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்தின் அமெலியா கெர் 66 ரன்களும், சுசி பேட்ஸ் 56 ரன்களும் எடுத்தனர், பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் 32 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் அச்சினி குலசூரிய மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
120 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 15.5 ஓவர்கள் நிறைவில், சகல விக்கட்களையும் இழந்து 60 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக சாமரி 19 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹூ ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தங்கள் அணியின் வெற்றிக்காக ஈடன் கார்சன், ஜெஸ் கெர், ஹன்னா ரோவ் மற்றும் ஃபிரான் ஜோனாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றது.
தற்போது, உலகக் கிண்ண அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணி, நடைபெற்ற 04 போட்டிகளிலும் வெற்றி பெற்று 08 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி நடைபெற்ற 04 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 04 போனஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
04 போட்டிகளில் 02 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது இலங்கை அணி. இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லுமா இல்லையா என்பதை எதிர்வரும் பங்களாதேஷ் தென்னாபிரிக்கா போட்டியின் முடிவு தீர்மானிக்கும்.
அதன்படி இலங்கை அணி அரையிறுதிக்கு செல்ல பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்க அணியைத் தோற்கடிக்க வேண்டும்
எனினும் தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே சாதகமான போனஸ் புள்ளிகளுடன் முன்னிலையில் இருப்பதால் கடைசி வாய்ப்பிலும் இலங்கை அணி நம்பிக்கை வைப்பது கடினம் என தெரிவிக்கப்படுகின்றது.