இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உலக அரபு மொழி தின விழா

 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தில் அரபு மொழி விசேடதுறை மாணவர்களின் ஏற்பாட்டில் உலக அரபு மொழி தின விழா நேற்று திங்கட்கிழமை பீடத்தின் கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ். எம். எம். மஸாஹிர் விசேட அதிதியாகவும், அரபு மொழிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அலியார் பிரதம அதிதியாகவும், அரபு மொழித் துறைத் தலைவர் ஏ. ஸீ.எப். ஸாதிபா சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் பீடத்தின் ஏனைய சிரேஷ்ட விரிவுரையாளர்களும், உதவி விரிவுரையாளர்களும் உட்பட சுமார் ஐநூற்றிற்கும் மேற்பட்ட மணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு கடந்த 15ஆம் திகதி பீட மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுடைய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு, அம்மாணவர்களுக்கான சான்றிதழ்களும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் அனுசரணையுடன் இந்நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டதன. மேலும் நிகழ்ச்சிகள் யாவும் அரபு மொழியில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள தரம் ஐந்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களால் உலக அரபு மொழியை முன்னிட்டு வரையப்பட்ட ஆக்கங்கள் நிகழ்ச்சியின் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான திறமை சான்றிதழ்களும் பீடாதிபதியின் கரங்களால் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வானது உலக அரபு மொழி தினத்தை மாத்திரம் கொண்டாடும் நிகழ்வாக மாத்திரமன்றி அரபு மொழியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவைப்பாட்டை உணர்த்தும் கருப்பொருளில் அமையப் பெற்ற ஓர் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.