கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகரவை, 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2025 பெப்ரவரி 19ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற மண்டபத்திற்குள் சட்டத்தரணி ஒருவரைப் போன்று உடையணிந்து வந்த நபரொருவரால், சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஏற்கனவே தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் வைத்து ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளுடன் இணைந்து இக்கொலைத் திட்டத்தை முன்னெடுத்தமை மற்றும் கொலைக்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கி அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசின்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.