-கிண்ணியா நிருபர்-
நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை பேணுவதும் தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், அண்மைக் காலங்களாக நிதியமைச்சின் கீழ் உள்ள சில முக்கிய துறைகளில் பதிவாகியுள்ள நிதி மோசடிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நிதியமைச்சின் நிர்வாகக் கட்டமைப்பில் உடனடி மாற்றங்கள் அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்ற நிலையில், நாட்டின் மிக முக்கியமான தூணாக விளங்கும் நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் நிதி மோசடிகள் இடம்பெறுவது துரதிஷ்டவசமானது. குறிப்பாக 2.5 மில்லியன் டாலர் நிதி கையாடல் விவகாரம், தபால் திணைக்கள நிதி மோசடி மற்றும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் என்பன சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களாகும்.
ஜனாதிபதி அவர்கள் நிதியமைச்சர் என்ற ரீதியில் பாரிய பொறுப்புகளை சுமந்திருப்பவர். எனினும், தற்போதைய சூழலில் நிதியமைச்சுக்கு என முழுநேரமும் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய, நிதி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சவால்களைக் கையாளக்கூடிய ஒரு தனி அமைச்சரின் தேவை அவசியமாகின்றது.
நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கம் அல்ல; மாறாக, அரசாங்கம் தனது நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும், அரச நிதியை முறைகேடுகளில் இருந்து பாதுகாக்கவும் இத்தகைய நிர்வாக மாற்றங்கள் அவசியமானவை.
எனவே, நிதியமைச்சின் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், இவ்வாறான மோசடிகள் இனி நிகழாமல் தடுக்கவும் தகுதியான ஒருவரை நிதியமைச்சராக நியமித்து, நிர்வாகப் பலவீனங்களை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.