-மன்னார் நிருபர்-
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளான, ஆர்.மேரி தயானா மற்றும் எஸ்.தமிழினி ஆகிய இரு மாணவிகளும், வடக்கு மாகாண பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளமையை பாராட்டி, மனோன்மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகர் அகஸ்டின் சவேரியான் வழிநடத்தலில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்/வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியான ஆர்.மேரி தயானா, வடக்கு மாகாண பெண்கள் கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்து விளையாடி வருவதை பாராட்டியும், அதே பாடசாலையைச் சேர்ந்த எஸ்.தமிழினி எனும் மாணவி வடக்கு மாகாண பெண் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து வடக்கு, வடமேல் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கிய “SUPER PROVINCE” அணிக்கு தெளிவாகி, தற்சமயம் தம்புள்ளை சர்வதேச கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்கின்றமையை பாராட்டியும், இரு மாணவிகளுக்கும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் அதிபர் அன்ரன் சேவியர் தலைமையில், மனோன்மணி அறக்கட்டளையின் பொருளாளர் திரு.அன்ரனி, பணிப்பாளர் பற்றிக், பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஓய்வுநிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் விஸ்வராஜா, கிராம அலுவலர் திரு. லுமாசிறி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர், பயிற்றுவிப்பாளர் கிஷோர், ஆகியோரின் பங்குபற்றுதலுடன், குறித்த இரு மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மனோன்மணி அறக்கட்டளையினால் வழங்கி வைக்கப்பட்டது.

“SUPER PROVINCE” அணிக்காக வாராந்தம் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்று வரும் எஸ். தமிழினி என்ற மாணவிக்கான போக்குவரத்து செலவினங்களை பொறுப்பேற்கும் முகமாக, பயிற்சி காலம் முடிவுறும் வரை மாதாந்தம் 20000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவும் மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
