எதிர்கால இந்திய அணியில் மாற்றங்கள்

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளதால் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளதால் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் ஃபார்ம் அவுட்டில் இருந்தது, மூத்த வீரர்கள் அணியில் சரியாக செயல்படவில்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஷமி, அஸ்வின் ஆகியோரின் எதிர்காலம் கேள்விகுறியாகவே உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறியதே இதற்கு காரணம். 169 ஓட்டங்கள் இலக்கு என்பது சற்று சவலானதே என்று கருதப்பட்ட நிலையில் இங்கிலாந்து 16 ஓவர்களில் அதனை எளிதாக அடைந்தது. இந்திய பந்துவீச்சு அவர்களை ஒரு இடத்திலும் அச்சுறுத்தவில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் மூத்த வீரர்களின் நிலை குறித்து பேசுவதற்கு தற்போது சரியான நேரம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ளதால் அதற்கு இப்போதே அணியை தயார்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மூத்த வீரர்களை டெஸ்ட் மற்றும ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட வைத்துவிட்டு டி20 போட்டியில் முழுவதும் இளம் வீரர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணியில் 3 வடிவங்களுக்கு ஒரே கேப்டன் என்பதை மாற்றியமைக்க நீண்ட நாட்களாக திட்டமிருந்த நிலையில் அதனை தற்போது நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளனர். அதற்கு ஒத்திகையாகவே இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இருக்கும். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஒரு நாள் தொடருக்கு ஷிகார் தவான் கேப்டன் ஆவார். சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் அணியின் திறன் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை பொறுத்து இனிவரும் டி20 போட்டிகளுக்கும் யார் கேப்டன் என்பது முடிவு செய்யப்படும். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவும் டி20 தொடர்களுக்கு ஹர்டிக் பாண்டியா கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.