தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

தனுஷ்க குணதிலக்க சந்தேக நபர் மாத்திரமே, குற்றவாளி அல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் ரொஷான் ரணதுங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிட்னி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, தனுஷ்க சார்பில் புதிய பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.