2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அமைச்சு மட்டத் திட்டங்கள் மற்றும் முக்கிய கொள்கை முன்மொழிவுகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று (17) புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் திட்டங்களின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல அமைச்சுகளின் திட்ட முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க, நிலவும் பிரச்சினைகளை தாமதமின்றி தீர்ப்பதற்காக அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தி அதன் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் எரிசக்தி அமைச்சின் செயலாளருமான ரசல் அபோன்சு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.