டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் செயற்பாட்டு விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
இந்தக் குழுக்கள் பெயரளவில் செயல்படாமல், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து ஒழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என அவர் கூறினார்.
வீடுகள் மற்றும் அரச அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கவுள்ளன. மேலும், உள்ளூராட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளன.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், சுமார் 25 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்களும் நிறுவனங்களும் வாரத்திற்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை தங்களது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்த ஒதுக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
“நோயாளர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதை விட நோய் பரவலைத் தடுப்பதே இப்போதைய முக்கிய தேவையாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற விசேட குழுக்கள் ஏனைய மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.