2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (NEDP) செயல்படுத்துவதற்கு இணையாக, சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்றுபுதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலில், ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக சுங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசோதிக்கும் Export Facilitation Centre இன் கொள்ளளவு, வசதிகள் மற்றும் நவீனமயப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் இலகுவாக ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது இலங்கை சுங்கத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், நாடு பூராகவும் உள்ள ஏற்றுமதியாளர்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஏற்றுமதித் துறையில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது சுங்கத்தின் கைத்தொழில் வசதிகள் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் TIEP Temporary Import for Export Processing செயல்முறையை மீண்டும் மீளாய்வு செய்து, இதுவரையில் ஏற்றுமதியில் ஈடுபடாத சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஏற்றுமதியில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்தும்போது, சுங்க நடவடிக்கைகளை பரவலாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பகுதியில் சுங்க ஏற்றுமதி மத்திய நிலையமொன்றை செயற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.