அமெரிக்கா விதிக்கத் திட்டமிட்டுள்ள புதிய சுங்க வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இறக்குமதி பொருட்களை அடையாளம் காணும் சுங்கப் பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கனவே வலுவான தொழிலாளர் சட்டங்களும் நடைமுறைகளும் உள்ளதாகத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சிறுவர் தொழில் மற்றும் கட்டாய உழைப்பு தொடர்பான எந்தவித சந்தேகங்களையும் முற்றிலுமாக நீக்குவதற்காக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறினார்.
மேலும், பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலின்றி வேலை செய்யும் உரிமையை அங்கீகரிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) C190 உடன்படிக்கையை இலங்கை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடை ஏற்றுமதியில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஆடைத் துறை கடந்த ஆண்டு 5 பில்லியன் டொலர் ஏற்றுமதியைப் பதிவு செய்திருந்தாலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்றுமதி 7.4 சதவீதம் குறைந்து 1.53 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி திட்டத்தின் கீழ், இலங்கை உள்ளிட்ட 60 பொருளாதாரங்கள் அதிகபட்சமாக 12.5 சதவீத சுங்க வரியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. போட்டி நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் 10 சதவீத வரி விகிதத்தில் உள்ள நிலையில், இலங்கைக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
இதனிடையே, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தற்போதைக்கு வாஷிங்டனுக்கு விசேட பிரதிநிதிக் குழுவை அனுப்பும் திட்டம் இல்லை எனவும் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.