ஈரான் அணுஆயுதங்களை உருவாக்குவதில்லை என்ற நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில், ஈரானின் உச்ச தலைவர் (Supreme Leader) மொஜ்தபா கமேனியை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஒளிபரப்பப்பட்ட “பாட் போர்ஸ் ஒன்” (Pod Force One) பாட்காஸ்ட் நிகழ்ச்சியிற்கு வழங்கிய நேர்காணலின் போதே ட்ரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அணுஆயுதங்களைக் கைவிடுவதற்கு ஈரான் ஏற்கனவே உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தை செயல்முறைகளில் ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது ஈரானிய மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து, எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் தாம் கமேனியை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றிகண்டுள்ளதாகக் குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் இராணுவம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகக் உரிமை கோரினார்.
எவ்வாறாயினும், தெஹ்ரானுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை வாஷிங்டன் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.