இலங்கையில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் சுமார் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டும் இருப்பதாக 2024ஆம் ஆண்டுக்கான உலக பாடசாலை மாணவர் சுகாதார ஆய்வு (Global School-based Student Health Survey) தெரிவிக்கிறது.
சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவு பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் மோனிகா விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் படி, 17.04% மாணவர்கள் தினமும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதுடன், 28.05% பேர் அதிக உப்பு கொண்ட உணவுகளையும், 29% பேர் அதிக கொழுப்பு கொண்ட உணவுகளையும், 41% பேர் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் தினசரி அல்லது அடிக்கடி உட்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலை, மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக டாக்டர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.9 இலிருந்து 1.3 ஆக குறைந்துள்ள நிலையில், எதிர்கால தலைமுறையினரான பாடசாலை மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது கவலைக்கிடமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.