ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் 15 வயதான இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை விளையாடிய போட்டிகளில் 14, 44, 21 மற்றும் 38 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார்.
ஐபிஎல் (IPL 2026) தொடரில் அதிரடி காட்டிய அவர், இந்தத் தொடரில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற போதிலும் அதனை பெரிய ஓட்டங்களாக மாற்றத் தவறி விக்கெட்டுகளை இழந்து வருகிறார்.
முக்கோண ‘ஏ’ அணி தொடரில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது, தமக்கு மிக அருகில் வந்து ஆக்ரோஷமாக நடந்துகொண்ட இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகேவை (Vishen Halambage) சூர்யவன்ஷி பிடித்துத் தள்ளியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ‘X’ தளத்தில், “நான் இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக அல்லது மேலாளராக இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யவன்ஷியை நீக்கியிருப்பேன்.
களம் என்னதான் தூண்டினாலும், மைதானத்தில் உடல் ரீதியான மோதலில் ஈடுபடுவது சரியல்ல என்பதை அவருக்கு உணர்த்தவே இதனைச் செய்திருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த மோதல் சம்பவத்தின் போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகே மற்றும் சிரேஷ்ட விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு போட்டி நடுவர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் தண்டனை விதித்துள்ளதாக பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹலம்பகே இந்திய வீரர்களைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும், மோதலைத் தடுத்து நிறுத்த முயன்ற திக்வெல்ல அதிகப்படியான நடுவர் முறையீடுகளை (Excessive Appealing) செய்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த மோதலில் ஈடுபட்ட சூர்யவன்ஷி மற்றும் மங்கிப்போகும் வெளிச்சத்தில் சூப்பர் ஓவரை நடத்துமாறு நடுவர்களுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்ட இந்திய அணித் தலைவர் திலக் வர்மா ஆகியோருக்கு உத்தியோகபூர்வ தண்டனை விதிக்கப்பட்டதா அல்லது எச்சரிக்கையுடன் விடுக்கப்பட்டார்களா என்பது குறித்த விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யவன்ஷி 38 ஓட்டங்களை (28 பந்துகள்) பெற்றிருந்த வேளையில், ஃபரிடூன் தாவூத்சாயின் (Faridoon Dawoodzai) பந்துவீச்சில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.