முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் மனு அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளில் வீடுகள் எரிக்கப்பட்டமைக்காக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டுத் தொகையை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே, அவருக்கு மீண்டும் மனு அனுப்புமாறு மனுதாரர் தரப்பிற்கு உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.
அதேவேளை, ஏனைய பிரதிவாதிகள் தேவைப்படின் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிபதிகள் குழாம், இந்த மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் சட்டத்திற்குப் புறம்பாகத் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பெருந்தொகை இழப்பீடு வழங்கப்பட்டதன் மூலம், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
மேலும், இந்த இழப்பீடு வழங்கப்பட்ட நடைமுறை குறித்து முறையான விசாரணை நடத்துமாறும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.