மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இன்று வியாழக்கிழமை மாலை இரண்டு ஆண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் சின்ன உப்போடை வாவிப்பகுதியில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தனர்.
மீட்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்தநிலையில், சடலங்களை நீதவான் முன்னிலையில் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொணடனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.