புற்றுநோயை கண்டறியும் பெட் ஸ்கேன் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கதிரியக்க இரசாயனப் பொருள் தட்டுப்பாடு காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ஸ்கேன் பரிசோதனை சேவைகள், நாளை புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் நிலவிய பதிவு தொடர்பான தாமதங்கள் காரணமாக, கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில், தற்போது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மே 8) அன்று பெட் ஸ்கேன் பரிசோதனைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான முதற்கட்டமாக, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இரசாயனப் பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில் நிலவிய சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக, எந்தவொரு நிறுவனமும் அதனை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது புற்றுநோயாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கும் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கும் கொண்டு சென்றதன் விளைவாகவே, இதற்கான தீர்வு வழங்கப்பட்டது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் இவ்வாறான அத்தியாவசியச் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவது அவசியம்