மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு  விளையாட்டு மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலயத்தின் அதிபர் அ.குலேந்திரராஜா தலைமையில் வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 14,16 மற்றும் 19 வயதுப்பிரிவில் 19 அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி இறுதிப்போட்டிகள் விசேட அதிதிகளினால் ஆரம்பித்துவிக்கப்பட்டது.

இச்சுற்றுப் போட்டியில் 14 வயதுப்பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியும், 16 வயதுப்பிரிவில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி அணியும் மற்றும் 19 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியும் முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கு.சுஜாதா கலந்து சிறப்பித்ததுடன், இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கோட்ட கல்வி பணிப்பாளர், கோட்ட பாடசாலை அதிபர்கள் கௌரவ அதிதிகளாக நிகழ்விற்கான அனுசரனையாளர்களும் கலந்து சிறப்பித்ததுடன், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.