மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் வழிகாட்டலில் பிரதேச சபையின் நூலகங்கள் ஒருங்கிணைந்து தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மீராவோடை பொதுநூலகத்தின் நூலகர் ருத்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், கௌரவ அதிதிகளாக உபதவிசாளர் ஏ.ஜி.அமீர், சபை உறுப்பினர்களான எம்.பி.ஜௌபர், எஸ்.ஏ.அன்வர், ரீ.கிருபைராசா, எம்.கிருபநாதன், ஏ.எல்.ஜெஸ்மின், எம்.பி.ஜெமிலா, எம்.பி.ஜெஸீமா, எம்.ஐ.மாஜிதா, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. உருத்திரகாந்தன், மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரீஸ், இளம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், மட்டகளப்பு கதிரவன் கலைமன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது, ஏசியா பௌன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஓட்டமாவடி பொது நூலகம், மீராவோடை பொதுநூலகம், மாஞ்சோலை பொதுநூலகம், காகிதநகர், வாகனேரி, வடமுனை, ஊத்துச்சேனை வாசிப்பு நிலையங்களுக்கு சுமார் 8 இலட்சம் பெறுமதியான நூற்தொகுதிகள் வழங்கப்பட்டதுடன், நூலகங்களினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த வருடம் தவிசாளரின் எண்ணக்கருவிற்கமைய முன்பள்ளி மாணவர்களுக்கு சிட்டி கார்டன் நிருவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட பலன் தரும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்த 23 முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதேச சபையின் பெண் உறுப்பினர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட 100 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வாசிப்பு மாத நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக மட்டக்களப்பு கதிரவன் கலைமன்றத்தின் சிறப்பு பட்டி மன்றம் மற்றும் நகைச்சுவை நாடகம் என்பன இடம்பெற்றன.