ஹொரணை பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரி, ஜூன் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை தலைமை நீதவான் லக்மினி விதானகமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை நீதிமன்ற உத்தரவின்படி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும், சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு கெமரா காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், சந்தேகநபர் இந்தச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபரான உதவி மேலாளருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் அல்ல எனக் கூறி, சாட்சியத் தொகுப்பு அறிக்கை ஒன்றைக் கோருமாறு கேட்டுக்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.