மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் போது பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு, நேற்றுபுதன்கிழமை நிறைவடைந்தது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பரிசோதிக்கப்பட்ட வளாகங்களில் 25,626 வளாகங்கள், அதாவது 26.2 சதவீதம் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேபோல், 6,268 வளாகங்களில், அதாவது 6.4 சதவீதம் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பூமிகளைச் சார்ந்த இடங்களிலேயே அதிகளவிலான டெங்கு குடம்பிகளின் சதவீதம் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட தொழிற்சாலை வளாகங்களில் 32.9 சதவீதத்திலும், கட்டுமானப் பூமிகளில் 21.8 சதவீதத்திலும் நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை, 89,417 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதில் 5,250 வீடுகளில் நுளம்பு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நுளம்புகள் பெருகும் வகையில் பராமரிக்கப்பட்டு வந்த 21,025 வளாகங்கள் அதே இடத்திலேயே சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சட்டரீதியான அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய 3,348 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், சுகாதார அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செயற்பட்ட 2,401 வளாக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்காக முப்படையினர், பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று வளாகங்களைப் பரிசோதித்தல், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காணல், சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை விநியோகித்தல் மற்றும் புகை விசிறல் போன்ற பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுவிடாமல், பொதுமக்கள் தங்களது வீடுகளையும் அதனைச் சுற்றியுள்ள சூழலையும் தொடர்ச்சியாக சுத்தமாக வைத்திருந்து, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்குப் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.