நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுகளை பண்டாரவளையில் உள்ள ஒரு பிரபலமான சிற்றுண்டி உணவகம் (Coffee Shop) ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை, 400,000 ரூபா அபராதம் விதித்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடுமையான குற்றங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விலை, எடை, உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி போன்ற கட்டாய லேபிள் தகவல்கள் இல்லாமல், கேக்குகள் மற்றும் பிஸ்கட் பக்கற்றுக்களை விற்பனை செய்ததையும், காலாவதியான பிஸ்கட் பக்கற்றுக்களை விற்பனைக்கு வைத்திருந்ததையும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டிகளிலும், சேமிப்புப் பகுதிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
நன்கு அறியப்பட்ட பிராண்டட் கடைகளில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கும்போதும் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், லேபிள்கள், விலைகள் மற்றும் காலாவதி திகதிகளைக் கவனமாகச் சரிபார்க்குமாறும், நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டது.
நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற எண்ணிற்கு அழைத்து முறைப்பாடு பதிவு செய்யலாம் என அச்சபை தெரிவித்துள்ளது.