இன்று வியாழக்கிழமை இலங்கை சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs), கொள்கலன் விடுவிப்பு உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
வர்த்தக சமூகத்தினருக்கு வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் கீழ், கொள்கலன் அனுமதி (clearance), இறக்குமதி தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கான கட்டண வசூல் போன்ற நடைமுறைகள் டிஜிட்டல் முறையில் கையாளப்படும்.
முன்னர் பல நாட்கள் எடுத்ததும், அதிகளவிலான ஆவணங்களை உள்ளடக்கியதுமான பணிகளை, இப்போது கப்பல் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்தே சில நிமிடங்களில் முடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
புதிய முறைமையின் மூலம் அனைத்து இறக்குமதியாளர்களும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தின் (Single integrated platform) வாயிலாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட நபர்களின் தீர்மானங்களுக்கு (individual discretion) உட்பட்டிருந்த பழைய கொள்கலன் விடுவிப்பு நடைமுறை இதன் மூலம் மாற்றியமைக்கப்படும்.
நடைமுறைகளைத் தரப்படுத்துவதன் மூலமும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலமும் இலஞ்ச ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.