கொழும்பு 10, மருதானை வீதியில் பயன்படுத்தப்படாமல் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பயன்படுத்தப்படாத காணித் துண்டுகளை இனங்கண்டு அவற்றை உரிய முறையில் அபிவிருத்தி செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் பரிந்துரைக்கமையவே மருதானை வீதியில் உள்ள காணியை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவைகளை மையமாகக் கொண்ட ஒரு ‘கலப்பு அபிவிருத்தித் திட்டம்’ (Mixed-use Project).
உள்நாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு அறிவுசார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் மையமாக இதனை மாற்றுதல்.
50 வருட கால நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த நிலம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்புடன் இந்தத் தளத்தை அபிவிருத்தி செய்ய முன்வரும் முதலீட்டாளர்களிடமிருந்து தற்போது முன்மொழிவுகள் கோரப்படவுள்ளன.
இந்தத் திட்டம் இலங்கையின் தொழில்நுட்பத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.