ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டியிருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இந்த புதிய சூழ்நிலையுடன் இன்று மீண்டும் 90 டொலர் எல்லைக்குக் கீழ் குறைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இன்று காலை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 89.33 டொலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 87.25 டொலராகவும் பதிவாகியிருந்ததுடன், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 86.74 டொலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்கா நேற்று ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றநிலை ஏற்பட்டது.
அதற்குப் பதிலடியாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ‘ஹோர்முஸ் நீரிணையை’ மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த புவிசார் அரசியல் தாக்கம் காரணமாக, நேற்று உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2 டொலருக்கும் அதிக தொகையால் வேகமாக அதிகரித்தது.
அதன்படி, நேற்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் அதிகரித்து ஒரு பீப்பாய் 95.40 டொலராகவும், அமெரிக்க WTI எண்ணெய் விலை 2.89% ஆல் அதிகரித்து ஒரு பீப்பாய் 92.63 டொலராகவும் அதிகபட்ச விலைகளைப் பதிவு செய்திருந்தது.
இருப்பினும், அமெரிக்கா தனது இராணுவத் தாக்குதல் திட்டங்களை ரத்து செய்ததால் ஏற்பட்ட சுமுகமான சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை குறுகிய காலத்திற்குள் மீண்டும் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.