இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் லோர்ட் ஹானெட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பாட்ரிக் ஆகியோர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை சந்தித்து கலந்துரையாடினர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரித்தானியாவின் Developing Countries Trading Scheme (DCTS) திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சுங்க வரியற்ற ஏற்றுமதி சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நீண்டகால பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் வெளிப்படையான மற்றும் முன்னறிவிக்கக்கூடிய வணிகச் சூழலை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.