தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த கலந்துரையாடல், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
அதன்படி, குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையானதாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ‘சமூக சக்தி’ மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை உள்ளடக்கும் வகையில் குறுகிய கால நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் Clean Sri Lanka செயலகத்தின் பிரதானியுமான எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோருடன், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கொழும்பு மாநகர சபை, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் முப்படைகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.