-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டம் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த ராணுவ வீரர், மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் ஜெயதிலக்க (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, அங்கு கடமையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பொறுப்பாக இருந்து கடமைக்கான துப்பாக்கிகளை விநியோகித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட போதே, குறித்த துப்பாக்கி இயங்கிய நிலையில் அவர் காயமடைந்து, உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த ராணுவ வீரரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.