கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்-

யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்ட குழியிலிருந்து அந்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.