கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 92 ம் கட்டை பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.00 மணியளவில், கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 92 ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார்.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி, அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினால் தொலைத்தொடர்பு கம்பம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தற்காலிகமாக தொலைத்தொடர்பு தடங்கல்களை எதிர்கொண்டுள்ளனர். சேதமடைந்த கம்பத்தை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விபத்து தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.