159 வருட பொலிஸ் வீரர் தினம் : அம்பாறையில் அனுஸ்டிப்பு

-அம்பாறை நிருபர்-

159 வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர் கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி ஜெயந்த ரட்நாயக்க கலந்து கொண்டு பொலிஸ் கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.

தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

மேலும் அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்(1) எஜ்.பி.எச் .செனவிரத்ன அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல ஹெரத் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் நாட்டிற்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வூபெற்ற மற்றும் தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் உட்பட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் அன்று 1864 மார்ச் மாதம் 21ம் திகதி கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ள உதுவன் கந்தை மலையடிவாரத்தில் இலங்கையின் ரொபின்ஹூட் என புகழ்பெற்ற திகரிகேவகே சரதியெலை கைது செய்வதற்கு சென்றபோது அவனுடன் மறைந்திருந்து அவனது நண்பன் மம்மிலே மரிக்காரின் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்நீத்த முதலாவது பொலிஸ் வீரர் பொலிஸ் கான்ஸ்டபிள் சஹானின் மரணத்தை முன்னிட்டு அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21ம் திகதி பொலிஸ் வீர ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது 30 ஆண்டுகளாக நீடித்த போரின் போது 15 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 2594 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு இன்று வரை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் தினத்தில் அவர்களை நாம் நினைவுகூர்வதோடு அவர் தம் குடும்பத்தினரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

பொலிஸ் சேவை என்பது பொது மக்களுடன் மிகவும் நெருங்கிய ஒரு சேவையாகும். அவர்களது இன்பத்திலும் துன்பத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை இன்றியமையாததாக காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும்.

இரவு பகல் பாராது கடமையாற்றி வீர மரணமடைந்த அனைத்து பொலிஸ் வீரர்களும் மார்ச் மாதம் 21ம் திகதி நினைவுகூரப்படுகின்றனர்.கடமையின்போது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பொலிஸார் மீண்டும் கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் கடமையைச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

பொலிஸார் முன்னுதாரணமான தேசியப் பிரஜைகளாக இன மத பேதமின்றிக் கடமையாற்றி நாட்டில் சமாதான சகவாழ்வை நிலை நிறுத்துவதில் பாடுபட்டு வந்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உயிர்நீத்த பொலிசாரின் உறவினர்களின் நலன்கள் ஆராயும் செயற்பாடும் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டது.