தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார், என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் பெரும்பான்மை பலத்தை (118 இடங்கள்) நிரூபிக்க முடியாமல் இருந்த விஜய்க்கு, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மொத்த பலம் 113-ஆக உயர்ந்த நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க வருமாறு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஆட்சி அமைப்பதில் திமுக எந்த இடையூறும் செய்யாது” என்றும் “அரசியலமைப்புச் சிக்கலைத் தவிர்க்கவே தாம் விரும்புவதாகவும்” தெரிவித்திருந்தது தவெக ஆட்சி அமைப்பதற்கான பாதையை எளிதாக்கியது. திமுக-வின் இந்த ஜனநாயக ரீதியான அணுகுமுறை தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, தவெக தரப்பில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மே 10, 2026 அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் அழைப்பு வெளியான செய்தியறிந்ததும், தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேவேளையில், சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய உளவுத்துறையின் (IB) ஆலோசனையின் பேரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கிறது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.