“வெளிநாடுகளில் பிரபலமான முறையில் திருமண விருப்பத்தைத் தெரிவிக்கப் போகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, காதலனின் கண்களைக் கட்டி, நாற்காலியில் அமரவைத்து உயிருடன் எரித்துக்கொன்ற பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு பெங்களூரின் அஞ்சனபுரா பகுதியில் இந்த பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவம் தொடர்பாக 27 வயதான பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரும், சந்தேக நபரான பெண்ணும் ஒரு தொலைத்தொடர்பு கடையில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகக் காதலித்து வந்த நிலையில், சமீபகாலமாக அந்த நபர் தன்னைத் தவிர்ப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்றும் அந்தப் பெண் சந்தேகித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரமே இக்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சம்பவத்தன்று தனது தாய் மற்றும் சகோதரர் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அந்தப் பெண். அங்கு வந்தவரிடம், வித்தியாசமான முறையில் தனது திருமண விருப்பத்தை (Wedding Proposal) தெரிவிக்கப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார்.
முதலில் காதலனின் கண்களைக் கட்டி நாற்காலியில் அமர வைத்துள்ளார்.
பின்னர், வெளிநாட்டுப் பாணியில் காதல் சொல்லப் போவதாகக் கூறி அவரது கை, கால்களை நாற்காலியுடன் சேர்த்துக் கட்டியுள்ளார்.
காதலன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஆசை வார்த்தை கூறி அவரை அமைதிப்படுத்தியுள்ளார்.
காதலன் எதிர்பாராத நிலையில், தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை அவர் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.
அவர் தீயில் துடிப்பதைக் கேமராவில் பதிவு செய்து அந்தப் பெண் பார்த்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.