இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று திங்கட்கிழமை இந்தியா முழுவதும் பெட்ரோல் லீட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லீட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்று பெட்ரோல் லீட்டருக்கு 34 சதமூம், டீசல் லீட்டருக்கு 23 சதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் லீட்டருக்கு 34 சதம் உயர்த்தப்பட்டு 108.01 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லீட்டருக்கு 23 சதம் உயர்த்தப்பட்டு 99.78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.