ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் முழு செயற்குழுவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட குழு கூட்டத்தைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதன்முதலில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று கடந்த ஏழு வருடங்களாக அந்தப் பதவியை வகித்து வந்தார்.
அரசாங்கத்தின் கோரிக்கை: அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஷம்மி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போதைய தகவல்களின்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானம், விளையாட்டு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.