மட்டக்களுப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு கல்வி வளையத்துக்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்யாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழாவும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்கும் முகமாக இப்பாடசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி இப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஊடகவியலாளர் திருமதி .வரதராஜன் வேணுகாவின் முயற்சியினால் சுவீடன் நாட்டில் வசிக்கும் முன்னாள் மண்டூர் ஓட்டு தொழிற்சாலை முகாமையாளர் வடிவேல் சந்திரகுமாரின் நிதி அனுசரணையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிட தொகுதிக்கான திறப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் திருவருட்செல்வன் தலைமையில் நேற்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வளைய கல்வி அலுவலகத்தின் கோட்டை கல்வி அதிகாரி எஸ்.ஜமுனாகரன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.
இதேவேளை இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன சுவீடன் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணம் கோப்பையைச் சேர்ந்த ராஜதுரை குலேந்திரராஜாவின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நிதி அனுசரணையின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.




