இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு (20 சதவீதம்) ஏதேனும் ஒரு வகையான தொற்றா நோய் பாதிப்பு காணப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையானது நாட்டின் பொதுச் சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான சவாலாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
களுத்துறை ஆயுர்வேத ஆதார மருத்துவமனையில் 250 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு மாடி விடுதி வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டிப் உரையாற்றிய அமைச்சர், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் மற்றும் பதிவாகும் மரணங்களில் சுமார் 80 சதவீதமானவை தொற்றா நோய்களுடனேயே தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.
நாட்டின் முதன்மைச் சுகாதார சவாலாக இது உருவெடுத்துள்ளது.
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக விலை கொண்ட மருந்துகளையோ அல்லது அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களையோ மட்டும் நம்பியிருக்காமல், கிராமிய மற்றும் சமூக மட்டத்திலான விழிப்புணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இதய நோய்களுக்கான சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில், இந்த ஆண்டில் 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் நாடு முழுவதுமுள்ள முக்கிய மருத்துவமனைகளில் 16 அதிநவீன கார்டியாக் ஆய்வகங்களை (Cath labs) நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தொற்றா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையில் தேசிய மட்டத்திலான தலையீடுகளும், அடிமட்ட அளவிலான விழிப்புணர்வுத் திட்டங்களும் தற்போதைய சூழலில் மிக அவசரமாகத் தேவைப்படுவதாக அமைச்சர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.