வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ விசேட விளக்கமளித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் இறக்குமதிச் செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய நாட்டிலுள்ள கையிருப்புகளை முகாமை செய்வதற்காக 3 மாத காலத்திற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
இருப்பினும், இதன் மூலம் வாகன இறக்குமதி தடை செய்யப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ இல்லை என்று கூறிய பிரதி அமைச்சர், இந்த நடவடிக்கை மூன்று மாத காலத்திற்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும், எவரேனும் இந்த நேரத்தில் வாகனத்தை இறக்குமதி செய்ய விரும்பினால் அவர் அந்த கூடுதல் வரிக்கு உட்பட நேரிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இந்நடவடிக்கை 3 மாத காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதிக்கான செலவு 2 பில்லியன் டொலர்களுக்கும் மேல் அதிகரித்துள்ள ஒரு சவால் நமக்கு உள்ளது. கடந்த காலத்தில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்களும் (LC) மிக வேகமாக திறக்கப்பட்டன. எனவே நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம்.
இந்த முடிவின் மூலம், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, 3 மாத காலத்திற்கு நாங்கள் வரியை அதிகரிக்கிறோம்.
இதன் நோக்கம் என்னவென்றால், அந்த 3 மாத காலத்திற்குள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை உங்களால் முடிந்தால் தாமதப்படுத்துங்கள் என்ற செய்தியை வழங்குவதே ஆகும். விலையை அதிகரிப்பது இதன் நோக்கமல்ல.
நாங்கள் தடை செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவசியமான ஒருவரால் கூட வாகனத்தை இறக்குமதி செய்ய முடியாமல் போயிருக்கும். நாங்கள் விதித்தது என்னவென்றால், வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை வரி 30% ஆகும். அந்த 30% இல் 50% என்பது, 15% மட்டுமே அதிகரிக்கிறது.
வாகனங்களின் விலை 50% ஆல் அதிகரிக்கும் என்று கூறுவது முற்றிலும் கட்டுக்கதையாகும். அப்படி நடக்காது. அதிகரித்தாலும் 15% மட்டுமே அதிகரிக்கும். அந்த அதிகரிப்பு, தங்களது நுகர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியாதவர்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டியதாக இருக்கும். இது ஒட்டுமொத்தமாக சந்தை விலையை பாதிக்காது” எனத் தெரிவித்தார்.