எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதால், அது போக்குவரத்து செலவுகளை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், அமெரிக்க டொலர் பரிமாற்ற வீதம், வட்டி வீதங்கள் மற்றும் பேருந்துகளின் விலை உள்ளிட்ட 12 முக்கிய அளவுகோல்களின் அடிப்படையிலேயே வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தீர்மானிக்கப்படுகிறது.
நாணய மதிப்பின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது கட்டண மாற்றங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய நிலைமை பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் சவாலாக மாறியுள்ளது” என கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.