பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் டீசல் வாகனங்களில் 50 சதவீதமானவை அதிக நச்சுத்தன்மையுள்ள கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புகைப் பரிசோதனைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை கரும்புகையை வெளியேற்றுவதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,000 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக, குறித்த பிரிவின் பணிப்பாளர் தசுன் ஜானக கமகே தெரிவித்தார்.
அதிக வாகனப் பயன்பாடு கொண்ட 12 மாவட்டங்களில் இப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக நடமாடும் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிக கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு, அந்தப் பழுதுகளைச் சரிசெய்வதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் பழுதுகளைச் சரிசெய்யத் தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்தகைய வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் புகைப் பரிசோதனைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.