கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று புதன்கிழமை கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தின் தலைப் பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளதுடன், கடந்த மே 18 ஆம் திகதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் பெரும்பாலான சமயங்களில் இந்த வீட்டிலேயே தங்கியிருந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என்பதால், கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.