காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில், வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற, முனைக்காடு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகளை, 600 கிராம் கேரளா கஞ்சாவுடன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின ஆலோசனையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில், போதை ஒழிப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி 20637 பொலிஸ் சாஜன் ஜயசிங்க தலைமையிலான, ரதன் உட்பட்ட 66928, 72341, 22295, 40202 ஆகிய குழுவினர், சம்பவ தினமான நேற்று இரவு 8.00 மணியளவில், ஆரையம்பதி பகுதியில் உள்ள வீதிகளில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது வியாபாரத்துக்காக கேரளா கஞ்சாவை எடுத்துக் கொண்டு வந்த இருவரையும், பொலிஸார் சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 600 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர், கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், இவரின் தந்தையார் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 50 கிராம் கேரள கஞ்சாவும், காத்தான்குடி 6 பிரிவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.