கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில், கருப்பை, கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள், நோயால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், ஆபத்துக் காரணிகள், நோயைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
கருப்பைக் கழுத்து புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்நோயுடன் நெருங்கிய தொடர்புடைய Human Papillomavirus infection (HPV) தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
HPV எவ்வாறு பரவுகிறது, அதனைத் தடுப்பதில் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் என்ன, பெண்கள் மற்றும் இளம் வயதினருக்கு இந்தத் தடுப்பூசி ஏன் அவசியம் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், தாய்மார்கள் மற்றும் குடும்பங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதிலும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களின் பங்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டதுடன், சமூக மட்டத்தில் அவர்களின் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.