நண்டை பழிவாங்க அதை உயிருடன் விழுங்கிய அப்பா

தனது மகளை கடித்த நண்டை பழிவாங்க அதை உயிருடன் சாப்பிட்டு, ஒரு நபர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சீஜியாங் மாகாணத்தில் வசிக்கும் 39 வயது நபர் லூ. இவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவரது மார்பு, குடல், செரிமான உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் வர அவரிடம் என்ன உணவு உட்கொண்டீர்கள், ஏதேனும் வித்தியாசமான உணவை சாப்பிட்டீர்களா என விசாரித்துள்ளனர். முதலில் அவர் தான் ஏதும் அப்படி சாப்பிடவில்லை எனக் கூறி சமாளித்துள்ளார். பின்னர், அவரது மனைவி மூலம் தான் உண்மை தெரியவந்துள்ளது. லூவின் மனைவி அங்கிருந்த மருத்துவர்களிடம் தனது கணவர் நண்டை உயிருடன் சாப்பிட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் லூவிடம் மனைவி சொன்னது உண்மைதானா எனக் கேட்டுள்ளனர்.

அப்போது ஆம் என உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் லூ. ஏன் நண்டை உயிரோடு சாப்பிட்டீர்கள் என மருத்துவர்கள் கேட்டபோது, தனது மகளை அந்த நண்டு கடித்துவிட்டதாகவும், அதற்கு நண்டை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் உயிருடன் நண்டை முழுங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு நண்டு சாப்பிட்டது ஒத்துக்கொள்ளாமல் அந்த நண்டில் இருந்து மூன்று தொற்று கிருமிகள் பாதித்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் நண்டு சாப்பிடுவதை அந்நாட்டு மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் தான், 2020ஆம் ஆண்டு சீனாவில் ஒரு பெண்மணி 30 நண்டுகளை உயிருடன் சாப்பிட்டு நுரையீரல் மற்றும் சுவாச கோளாறு பாதிப்புக்கு ஆளானார்.