மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெளி வயல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரடியனாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெருவெளி வயல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக கொட்டகை ஒன்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உள்நாட்டுத் தயாரிப்புத் துப்பாக்கி ஒன்றினை பொலிஸார் மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சட்டவிரோதமான முறையில் ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.