கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பேராறு 129/1 வீதியானது சுமார் 15 ஆண்டுகளாக குன்றும் குழியுமாக காணப்படுவதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள இவ்வீதியானது, தற்போது பெய்து வரும் மழையினால் சேறும் சகதியுமாக மாறி குளம்போல் காட்சியளிக்கின்றது.
இரவு நேரங்களில் வெளிச்ச வசதி இல்லாத காரணத்தால் பயணிப்பதும் பெரும் சவாலாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் எவரும் சிரமமின்றி பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் சீருடைகள் அழுக்கடைந்த நிலையிலேயே பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய துரதிர்ஷ்ட நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியை அன்றாடம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், வீதியின் மோசமான நிலை காரணமாக நேரத்திற்கு கடமைகளுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வீதிப் பிரச்சினை தொடர்பாக கந்தளாய் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கந்தளாய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் (RDS) தலைவர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
“தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கும் மக்கள் பிரதிநிதிகள், அதன் பின்னர் எம்மை திரும்பிப் பார்ப்பதில்லை. 15 வருடங்களாக தொடரும் இந்தப் புறக்கணிப்பு எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது” என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமது கிராமத்தின் அடிப்படைத் தேவையான இவ்வீதியை உடனடியாகப் புனரமைத்து தருமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி நிரந்தரத் தீர்வை வழங்குமாறும் பேராறு 129/1 வீதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
