2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றுள்ள ஈரான் அணியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இத்தாலியைச் சேர்க்குமாறு அமெரிக்க விசேட பிரதிநிதி பாவ்லோ சாம்பொலி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான முழுமையான தயார் நிலையில் தாம் இருப்பதாக ஈரான் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் ஈரான் பங்கேற்கும் என தான் எதிர்பார்ப்பதாக பிஃபா தலைவர் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் கருத்துத் தெரிவிக்கையில், ஈரான் அணியை இப்போட்டித் தொடருக்கு அன்புடன் வரவேற்பதாகவும், ஆனால் அவர்களின் “உயிர் மற்றும் பாதுகாப்பு” குறித்து ஒரு சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போட்டி அட்டவணையின்படி, ஈரான் தனது ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் பெல்ஜியம், நியூசிலாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் சியாட்டில் மற்றும் லோஸ் ஏஞ்சலஸ் நகரங்களில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்றுமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை பிஃபா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.