லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ஆர்.எம். குணரத்ன, ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களின் கீழ் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான அரசாங்க கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே 43 இலட்சம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்திற்கு உப்புப் பொதியிடும் உறைகளைக் கொள்முதல் செய்யும் போது, முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளரை மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த லஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.